TN Agriculture Budget 2025: வேளாண் காடுகள் கொள்கை, இழப்பீட்டுத் தொகை உயர்வு - முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு!
தமிழ்நாடு சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா, புதிய கண்டுபிடிப்புகளுக்கு பரிசு, வேளாண் காடுகள் கொள்கை, இழப்பீட்டுத் தொகை உயர்வு உள்ளிட்ட பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
2025 - 26ம் நிதி ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், வரும் நிதியாண்டில் வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ.45,661 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு மானியங்கள், உழவர் நல சேவை மையங்கள், விவசாயிகளுக்கு சுற்றுலா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, தமிழ்நாட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் நிதி உதவிகள் உயர்த்தப்படும் எனவும் இன்றைய பட்ஜெட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுபோல் மேலும் பல முக்கிய அறிவிப்புகள் இன்றைய வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்...

புவிசார் குறியீடு
- வேளாண் விளை பொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்.
- ரூ 15 லட்சத்தில் நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும்.
- ரூ.1.35 கோடியில் காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும்.
- ரூ.6.16 கோடியில் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
உழவர் சந்தைகள்
- விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான கட்டண தொகையாக ரூ.8,186 கோடி ஒதுக்கீடு
- 50 உழவர் சந்தைகள் தேர்வு செய்யப்பட்டு 10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
- நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.525 கோடியும், பயிர் கடன் மானியத்திற்காக ரூ.853 கோடியும் நிதி ஒதுக்கீடு
- வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
- உழவர்களுக்கு 10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும்
- பயிர் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

வேளாண் தொழில்முனைவோர்
- நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ.146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்
- கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ.269 கோடியில் செயல்படுத்தப்படும்
- வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன.
மானியம்
- காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பழச்செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்
- பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
- புரதச்சத்து நிரைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளாண் காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்
- 1,000 முதல்-அமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்
- மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு திட்டத்துக்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு
- டெல்டா அல்லாத பயிர் சாகுபடியை அதிகரிக்க 102 கோடி ஒதுக்கீடு
- மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.40.27 கோடி ஒதுக்கீடு
- மின்சார இணைப்பு இல்லாத ஆயிரம் விவசாயிகளுக்கு தனித்து சூரியசக்தியால் இயங்கக் கூடிய பம்புசெட்டுகள்

சிறுதானிய இயக்கம்
- இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.12 கோடியில் திட்டம்
- ரூ.108 கோடியே 6 லட்சம் செலவில் உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம்
- ரூ.52 கோடியே 44 லட்சம் செலவில் சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்
- மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் வேளாண் எந்திரம் உள்ளிட்டவை வழங்க ரூ.22.80 கோடி ஒதுக்கீடு
- வேளாண்மையில் அதிக உற்பத்தி மற்றும் புதிய தொழில் நுட்பங்களை கண்டறியவும் விவசாயிகளுக்கு பரிசுகள்.
- ரூ.1 கோடியில் வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான " "டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" உருவாக்கப்படும்
- ரூ.297 கோடியில் கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை.
வேளாண்காடுகள் கொள்கை
- பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க, "தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை"
- நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக, மூன்று லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ.1.168 கோடி ஒதுக்கீடு
- வரும் நிதியாண்டில் 35 லட்சம் ஏக்கரில் பயிர்களை காப்பீடு செய்ய பட்ஜெட்டில் 841 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- உணவு மானியத்திற்காக ரூ.12,500 கோடியும், கூட்டுறவு பயிர் கடன் வழங்க ரூ.17,500 கோடி இலக்கு நிர்ணயம்
- சூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ.108 கோடி மதிப்பில் திட்டங்கள்

பனை சார்ந்த தொழில்கள்
- டெல்டா மற்றும் பிற மாநிலங்களில் நெல் இயந்திர நடவு மானியம் மற்றும் விதைகள் வழங்க 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- ரூ.215.80 கோடி மதிப்பில் 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும்
- ரூ.10.50 கோடி மதிப்பில் சிறு, குறு விவசாயிகளின் பயனிற்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்
- புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு ரூ.1.5 கோடியில் மானியம்
- பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் ரூ.1.65 கோடி ஒதுக்கீடு
வெளிநாட்டு சுற்றுலா
- நெல் உற்பத்தியின் புதிய தொழில்நுட்பங்களை அறிய 100 விவசாயிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா
- உழவர்களுக்கு விதைகள், உரங்கள் விற்பனை செய்ய ஆயிரம் முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
- உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட உழவரைத் தேடி வேளாண்மை திட்டம்
- மண்வளத்தினை மேம்படுத்திட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.142 கோடி ஒதுக்கீடு.
- உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம்.

இழப்பீட்டுத் தொகை உயர்வு
- 30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ.5,242 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்கான இழப்பீடு ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.2 இலட்சமாக உயர்வு
- விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி ரூ.20,000 லிருந்து ரூ.1 இலட்சமாகவும் உயர்வு
- இயற்கை மரணத்துக்கான நிதி உதவி ரூ.20,000 லிருந்து ரூ.30,000 ஆகவும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2,500 லிருந்து ரூ.10,000 ஆகவும் உயர்வு