600 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த Zomato - AI தான் காரணமா?
உணவு விநியோக மந்தநிலை மற்றும் AI தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, தனது வாடிக்கையாளர் ஆதரவு ஊழியர்கள் (customer support employees) 600 பேரை ஜோமாட்டோ அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உணவு விநியோக மந்தநிலை மற்றும் ஆட்டோமேஷன் அழுத்தம் காரணமாக 600 வாடிக்கையாளர் ஆதரவு ஊழியர்களை ஜோமாட்டோ அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்த ஊழியர்கள், குர்கான் மற்றும் ஹைதராபாத் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் என்றும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர் சரிவு
உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோகத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஜோமாட்டோ உள்ளது. ஆனால், சமீபகாலமாக அதன் உணவு விநியோகத்தில் வளர்ச்சி குறைந்து, அதன் விரைவு வர்த்தகப் பிரிவான Blinkit-லும் அதிக சரிவுகளைச் சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக தனது செலவைக் குறைக்கும் முயற்சிகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, செலவுகளைக் குறைக்கும் முயற்சியில், ஜோமாட்டோ அதன் வாடிக்கையாளர் ஆதரவு செயல்பாடுகளை தானியங்கிமயமாக்குவதற்கு செயற்கை நுண்ணறிவை (AI) அதிகளவில் பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில், செலவைக் குறைக்கும் அடுத்த நடவடிக்கையாக, ஜோமாட்டோ, தனது வாடிக்கையாளர் ஆதரவு ஊழியர்கள் 600 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியினாது. இந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி பணிநீக்கம்
ஜோமாட்டோ நிறுவனம் ஒரு வருடத்திற்கு முன்பு தனது ஜோமாட்டோ அசோசியேட் ஆக்சிலரேட்டர் திட்டத்தின் (ZAAP) கீழ் 1,500 ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில், வாடிக்கையாளர் ஆதரவுப் பணிகளில் பணியமர்த்தியது. இதன் மூலம் ஒரு வருடத்திற்குள் விற்பனை, செயல்பாடுகள், திட்ட மேலாண்மை, ஆதரவு, விநியோகச் சங்கிலி மற்றும் வகை குழுக்கள் ஆகியவற்றில் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பை வழங்கியது.
இந்தப் பணிக்குத் தேர்வானவர்கள் ஒரு வருடத்திற்குப் பிறகு பதவி உயர்வு பெறுவார்கள் என அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தங்கள் பதவிக்காலத்தின் முடிவில் புதுப்பிப்புகளைப் பெறவில்லை.
இந்நிலையில், அந்த ஒப்பந்த ஊழியர்களில் 600 பேர் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நிபந்தனை பணி கால (Notice period) அனுமதியும் இல்லாமல் உடனடியாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பலர் குர்கான் மற்றும் ஹைதராபாத் அலுவலகங்களில் வேலை பார்த்தவர்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து சொமேட்டோ எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

AI-யும் ஒரு முக்கியக் காரணம்
ஜோமாட்டோ, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் Nugget என்ற AI வாடிக்கையாளர் சேவை மையத்தை ஆரம்பித்தது. இது மாதத்திற்கு சுமார் 15 மில்லியன் வாடிக்கையாளர் தொடர்பு சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த AI வாடிக்கையாளர் சேவை மையமும், தற்போது அதிகளவில் ஊழியர்கள் வேலை இழக்க ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
ஜோமாட்டோ இது தொடர்பாக இன்னும் எதுவும் பேசாத நிலையில், அதன் முன்னாள் மற்றும் தற்போது வேலை இழந்த ஊழியர்கள் மூலம் இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சின்ன சின்னக் காரணங்கள் மற்றும் சில அர்த்தமற்ற காரணங்களைச் சொல்லி பலரை ஜோமாட்டோ வேலையில் இருந்து நீக்கி இருப்பதாக அந்தப் பதிவுகளில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போதிய அவகாசம்கூட தராமல், அதிரடியாக தங்களை ஜோமாட்டோ பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.